Wednesday 21 September 2011

தமிழ்ச் சங்கமா ஆங்கிலச் சங்கமா...


அன்பார்ந்த சங்க உறுப்பினர்களே

சங்கத்தின் எதிர்கால நலன்கருதி, சங்கச் சீரமைப்பு அணியின் வேட்பாளர்கள் சிலர், நடைபெற இருக்கும் பேரவையின் பரிசீலனைக்கு சில தீர்மானங்களை முன்வைத்தார்கள். இந்தத் தீர்மானங்களை எழுத்து வடிவில் சங்கச் செயற்குழுவுக்கு அளித்தார்கள். இந்த செயற்குழு, சங்க விதிமுறைகளை துச்சமென மதித்து, தீர்மானங்களை பேரவையில் வைக்க முடியாது என்று அறிவிப்புப் பலகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்தத் தீர்மானங்களில் ஒன்றின் கருத்து - செயற்குழுவின் நடவடிக்கைகளில் ஒளிவுமறைவின்மையை ஊக்குவிக்கும் விதமாக, எதிர்கால செயற்குழுக்களுக்கான நடைமுறை விதி:
சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தின் அழைப்பாணை, பங்கேற்றோர்  பதிவேடு, நடவடிக்கைக் குறிப்புகள் மற்றும் வரவு செலவுக் கணக்கு அறிக்கை முதலியவை கீழ்க்கண்ட கால அவகாசப்படி சங்கத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படாவிடின் அதற்குப் பொறுப்பானவர் யார் என்ற விவரமும் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்றும் இப்பேரவை செயற்குழுவைப் பணிக்கிறது.

விவரம்                                         காலக் கெடு
செயற்குழுக்கூட்டத்துக்கான அழைப்பாணை     வெளியிடப்பட்ட அன்று
பங்கேற்றோர் பதிவேடு                          கூட்டம் நடந்த இரண்டு நாட்களுக்குள்
வரவு செலவுக் கணக்கு அறிக்கை                கூட்டம் நடந்த இரண்டு நாட்களுக்குள்
குறிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்       கூட்டம் நடந்த ஒரு வாரத்துக்குள்

மேற்கண்ட தீர்மானம் எந்த வேட்பாளருக்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல, எவருக்கும் பொருள் லாபமோ, வாக்கு லாபமோ தருவதும் அல்ல. செயற்குழுவின் செயல்பாடுகள் பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒளிபரப்பப்படுவதும் தகவல் உரிமைச்சட்டம் அமல்படுத்தப்படுவதும் எதனால்? செய்திகள் அனைவரையும் சென்றடைய வேண்டும், தமது பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று வாக்காளர்களுக்குத் தெரிய வேண்டும் என்பன ஆரோக்கியமான் மக்களாட்சிப் பண்பின் அடிப்படைகள். இந்த தீர்மானம் தேவையா என்ற விவாதம் இப்போது தேவையில்லை, இதன் குறைநிறைகளை பேரவை விவாதித்து முடிவு எடுக்கட்டும், ஆனால் இதை பேரவைக்குக் கொண்டுசெல்லவே கூடாது என்று வழியை மறிக்கவேண்டிய அவசியம் என்ன?

சரி, இதை பேரவையின்முன் வைக்க மாட்டோம் என்று நிராகரித்த செயற்குழு, இந்த விஷயத்தை முறையாக செயற்குழுவில் விவாதித்ததா? விவாதிக்கவில்லை. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இதைப்பற்றித் தெரிவிக்காமல், சிலரிடம் மட்டும் சுற்றறிக்கையாக அனுப்பி கையெழுத்துப் பெற்று செயற்குழு முடிவு செய்ததாக அறிவித்திருக்கிறார்கள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் என்று பராபரியாகக் கேள்விப் படுகிறோமே, நாம் மேலே குறிப்பிட்ட தீர்மானம் நடைமுறையில் இருந்தால் இது பற்றிய முழு உண்மைகளும் வலைத்தளத்தில் இருந்திருக்குமே என்ற ஏக்கத்தை மறைக்க முடியவில்லை!

அவர்கள் இதை நிராகரிக்க முன்வைத்திருக்கும் காரணங்களைப் படித்தால், அவை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவைகளாக இருக்கும். சங்க அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பின் பிரதி கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


முதல் காரணம் தீர்மானத்தின் ஆங்கில வடிவத்தைத் தரவில்லையாம்.

ஆஹா... தமிழறிந்த தமிழர்கள் மட்டுமே உறுப்பினராக இருக்கும் தமிழ்ச் சங்கத்தில் யாரும் தமிழில் தீர்மானத்தை வைக்க முடியாது என்பது இதுவரை நம் யாருக்குமே தெரியாமல் போய் விட்டதே....!? அப்படியானால் ஆங்கிலம் தெரியாத, தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் சங்கத்தில் எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாதோ...!? ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக இருக்க முடியுமோ அல்லது ஆங்கிலம் அறிந்தவர்கள் மட்டும்தான் கருத்துக்கூற முடியுமோ...!? அடடா... இது தெரியாமல் இத்தனை காலமாக தமிழர்களாகிய நாம் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்து வருகிறோமோ...!? தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்; தமிழ்ப் பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும், நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாதுஎன்று பாடிய பாவேந்தருக்கு ஒரு கொட்டாவி அஞ்சலி செலுத்துவோம் – தமிழ்ச் சங்கத்தின் சார்பில்.

எமக்கு இன்னொரு சந்தேகமும் எழுகிறது. சங்க விதி 37, The proceedings of the meeting of the General Body and the Executive Committee shall ordinarily be conducted in Tamil எனக் கூறுகிறதே. ஒருவேளை இந்த விதி தவறானதோ...!? இந்த விதிகளை வகுத்த ஆன்றோர்கள் அறிவுகெட்டுப் போய் தமிழில்தான் விவாதங்களை நடத்த வேண்டும் என்று கூறி விட்டார்களோ.

குழப்பமாக இருக்கிறது ஐயா.

யாம் கொடுக்கிற கடிதம் எதற்கும் பதில் தருவதில்லை என்று தலைவரும் செயலரும் உறுதிமொழி எடுத்திருப்பது போலத் தெரிகிறது. அதனால் செயற்குழுவில் இருக்கும் ஆங்கில மேதாவிகளிடம் அல்லது அவர்களுக்கு ஆலோசனை கூறும் அறிவாளிகளிடம் கேட்டு யாரேனும் தெளிவுபடுத்தினால் நல்லது.

இரண்டாவது காரணம் - 18-12-2005இல் நடைபெற்ற 45ஆவது பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தீர்மானத்தை முன்வைப்பதற்கான துணைவிதி குறிப்பிடப்படவில்லையாம்.

அடேயப்பா.... எவ்வளவு புத்திசாலிகள் இந்த செயற்குழுவின் முக்கியஸ்தர்கள்.... தீர்மானத்தை நிராகரிக்க எவ்வளவு நுணுக்கமாக சட்ட விஷயங்களை அலசியிருக்கிறார்கள் . . .  என்று யாரும் நினைத்து விடாதீர்கள் நண்பர்களே.

முதலாவதாக, 18-12-2005இல் நடைபெற்றது 45ஆவது பேரவை அல்ல, 43ஆவது பேரவை. ஆனால் 18.12.2005 அன்று நடைபெற்ற பேரவையின் நடவடிக்கைக் குறிப்பிலோ, 45 ஆவது பேரவைக்கூட்ட நடவடிக்கைக் குறிப்பிலோ இந்தமாதிரி எந்த கட்டுப்பாடும் காணக்கிடைக்கவில்லை. எதோ ஒரு கூட்டத்தின் ஒலி நாடாவில் இருக்கிறது என்று ஒரு பெருமகனார் தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒலி நாடாவின் கருத்துக்களுக்கேற்ப தீர்மான வரைவுகளை அனுப்பாதது நமது தவறுதான் இல்லையா... !?

சரி, தீர்மானங்கள் ஆங்கிலத்தில் தரப்படவில்லை, துணைவிதிகள் குறிப்பிடப்படவில்லை என்ற இரு குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொள்வோம். இந்தச் செயற்குழு ஒரு ஆண்டறிக்கை அனுப்பி இருக்கிறதே - அது என்ன ஆங்கிலமா அல்லது தமிழா...!?

நான் தமிழ் என்றுதான் எண்ணினேன். இவர்கள் கணக்கில் அது ஆங்கிலமோ....!? அப்படியானால் ஆங்கிலத்தைத்தான் நான் இத்தனை காலமும் தமிழ் என்று எண்ணி வந்திருக்கிறேனோ...!?

சரி போகட்டும். இவர்கள் முன்வைத்திருக்கிற ஆண்டறிக்கை மற்றும் செயலறிக்கைகளில் எந்த துணைவிதியின் கீழ் இவை தரப்படுகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்களா...!? அல்லது எந்த அமைப்பு விதியின் கீழ் பேரவை கூட்டப்படவிருக்கிறது என்றாவது குறிப்பிட்டிருக்கிறார்களா? என் கண்களுக்கு அந்தத் துணைவிதிகள் ஏதும் தென்படவில்லை. ஒருவேளை செயற்குழு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஆலோசகர்களுக்கும் மட்டுமே தெரியக்கூடிய வகையில் இரகசிய மையில் துணைவிதிகள் அச்சாகி உள்ளதோ....!?

உங்களில் யாருக்கேனும் இந்தத் துணைவிதி தென்பட்டால் தயவுசெய்து தெரிவியுங்கள் நண்பர்களே...

இந்தத் தீர்மானத்தைப் பேரவை முன் வைக்க மறுப்பதற்கான மூன்றாவது காரணம்: இது அமைப்பு விதி 45க்கு ஏற்ப இல்லையாம். விதி 45 கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது:

Additions, etc., to the Rules:
1)      Any additions, alterations or omissions in these Rules and Regulations shall be effected by a resolution of the members of the Sangam present at duly convened General Body Meeting and by a resolution passed by two thirds of the total members of the Sangam present at the meeting.
2)      The draft of the proposed additions, alterations or omissions shall be circulated at least 21 days prior to the meeting to all members of the Sangam.
3)       Such additions, alterations or omissions shall come into force immediately after the confirmation of the minutes of the meeting referred to sub-rule (1) above in a subsequent General Body Meeting which can be held on the same day by 2/3rd majority of the members present at the meeting.

எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின்படி, விதி 45, அமைப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது. சான்றாக, அமைப்பு விதிகளின்படி செயற்குழுவின் ஆட்சிக்காலம் 2 ஆண்டுகள் - இதைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டுமாயானால் அமைப்பு விதிகளில் மாற்றம் செய்துதான் இதைக் கொண்டுவர இயலும், அதற்கான முயற்சி விதி 45க்கு உட்பட்டதாக இருக்கும். நாம் மேலே கண்ட தனி நபர் தீர்மான வரைவு அமைப்பு விதிகளில் எந்த மாற்றத்தையும் கோரவில்லை. ஆகவே இதற்கும் அமைப்பு விதி 45க்கும் இடையே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இருப்பதைப்போன்ற நெருங்கிய தொடர்பு உண்டு.

சங்க விதிகளுக்கு மாறாக இந்தத் தீர்மானங்களை முன்வைக்க மறுத்த இன்றைய செயற்குழுவின் முக்கியஸ்தர்கள் உண்மையிலேயே விவரம் அறிந்தவர்களாக இருந்திருந்தால், ஆங்கிலம் - தமிழ் இரண்டும் அறிந்தவர்களாக இருந்திருந்தால், சங்க விதிகளைப் படித்தவர்களாக இருந்திருந்தால், அல்லது நடுநிலையாளர்களிடம் ஆலோசனை கேட்டிருந்தால், சங்க நலன் கருதுபவர்களாக இருந்திருந்தால், சங்கச் செயற்குழுவின் செயல்பாடுகள் உறுப்பினர்களுக்கு ஒளிவுமறைவு இன்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்திருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்?

இந்தத் தீர்மானம் மிகவும் அருமையானது, இதை தனிநபர் தீர்மானமாக இல்லாமல் செயற்குழுவின் தீர்மானமாக முன் வைக்கிறோம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்? அப்படிச் செய்திருந்தால் அவர்களுக்கல்லவா பெருமை சேர்ந்திருக்கும்! அந்தப் பெருமை வேண்டாம் என்ற அவர்களது தியாகத்துக்குத் தலைவணங்குவோம்

இந்தச் செயற்குழுவின் முக்கியஸ்தர்கள் பலரும் பலமுறை பதவிகளை வகித்தவர்கள். ஆனால் இன்றும்கூட சங்க விதிகள் என்ன என்பதை தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவர்கள். தம்மைப்போன்ற ஆட்கள்தான் சங்கத்தில் அடுத்து பொறுப்புக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள். மீண்டும் 2013 அல்லது 2014 தேர்தலில் பொறுப்புக்கு வந்து சங்கவிதிகள் பற்றிய தமது ஆய்வைத் தொடர்வார்களோ?.

ஆகவே நண்பர்களே, இந்தத் தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவு, சங்க எதிர்காலத்துக்கான முடிவு.

சங்க விதிகளை அறிந்தோ அறியாமலோ துச்சமாக மதித்து, மிதித்து, ஆணவத்துடன் செயல்படுவோர் சிலர் முன்வைக்கும் வேட்பாளர்களைத் தோற்கடித்து பதிலடி கொடுங்கள். சங்கச் சீரமைப்பு அணிக்கு வெற்றி தேடித் தாருங்கள்.

வாக்களித்து விட்டுச் சென்று விடாமல் பேரவையில் உங்கள் கருத்தை வலுவாக வெளிப்படுத்துங்கள். சங்கத்தைக் காக்க உதவுங்கள்.

நிராகரிக்கப்பட்ட மற்றொரு தீர்மானம் பற்றி அடுத்த பதிவில்.

2 comments:

K. hariharan said...

there is no details about the resolutions which have been rejected by the present body. this can be raised on 25th itself by others also during GB meeting.

GND ELANGOVAN said...

Thiru Penneeswaran in his email today mentioned that our website address is a "MOTTAI THALAI"we site . it is requested to kindly try to do if it is necessary.

GND Elangovan